tamilnadu

img

37 முறை கடிதம் எழுதியும் மோடியிடம் பதிலில்லை

கான்பூர்:
பணியிலிருந்து நீக்கப்பட்ட தனது தந்தைக்கு மீண்டும் பணிவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன், பிரதமர் மோடிக்கு 37 முறை கடிதம் எழுதியிருப்பதும், அதற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட பதிலளிக்கவில்லை என்பதும் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சிறுவன் சர்தக் திரிபாதி (13). எட்டாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவனின் தந்தை சத்யஜித் திரிபாதி உத்தரப்பிரதேச பங்குச் சந்தையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நல்லமுறையிலேயே தனது வேலையைச் செய்து வந்த போதும், திடீரென சத்யஜித்தை பணியில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். வேலைப் பறிக்கப்பட்டதால் சத்யஜித்தின் குடும்பம், கடந்த சில ஆண்டுகளாகவே வறுமையின் பிடியில் தவித்து வந்துள்ளது. இந்நிலையில் சத்யஜித்தின் மகன் சர்தக்,‘தன் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும்’என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்துள்ளான்.

“உத்தரப்பிரதேச பங்குச் சந்தையில் வேலை செய்துகொண்டிருந்த என் தந்தை திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டார். அதனால் எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. எனவே அந்த வேலையை என் தந்தைக்கு மீண்டும் தர நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று ஒவ்வொரு முறையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு வந்துள்ளான்.இவ்வாறு கடந்த 2016-ஆம் ஆண்டு,முதன்முறையாக கடிதம் எழுதத் துவங்கிய சர்தக், இதுவரை 36 கடிதங்களை மோடிக்குஎழுதிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த 3 ஆண்டுகளிலும் மோடியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. 

எனினும், சர்தக் தனது முயற்சியில் மனம்தளருவதாக இல்லை. மோடியின் உள்ளத்தில் கருணை இருக்கிறதா? என்று கண்டுபிடித்தே தீருவேன் என்று 37-ஆவது கடிதத்தையும் சர்தக் தற்போது அனுப்பி வைத்துள்ளான். இதனிடையே, மோடிக்கு கடிதம் எழுதிவரும் சிறுவன் சர்தக் திரிபாதிக்கு, பாஜக-வினர் பலர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார்கள்எழுந்துள்ளன.
“பிரதமர் மோடிக்கு நான் தொடர்ந்து கடிதம் எழுதுவதால் என் தந்தைக்கு நிறையதொலைப்பேசி மிரட்டல்கள் வருகின்றன; அவர்கள் என் தந்தை மற்றும் குடும்பத்தைகொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள்” என்று சிறுவன் சர்தக் திரிபாதி தெரிவித்துள்ளான். எனினும், பிரதமர் மோடி மீது நம்பிக்கை இருப்பதாகவும், “ஒரே ஒருமுறை என் கடிதத்தை பார்த்து அதற்குப் பதில் கூறினால் மகிழ்ச்சியடைவேன்” என்றும் சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.